வரவேற்பு
படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோபிசெட்டிபாளையத்தில் அரசு டவுன் பஸ்சில் கதவுகள் பொருத்தம் பயணிகள் வரவேற்பு;
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 37 டவுன் பஸ்களும், 46 புறநகர் பஸ்களும் இயக்கப்படுகின்றன. கடந்த 2021-ல் தொடங்கிய தமிழக அரசின் மகளிர் இலவச பயணத் திட்டத்தால் அரசு டவுன் பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கூட்டம் அதிகரித்து படிக்கட்டில் நின்றும், தொங்கிய படியும் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் அபாய பயணம் மேற்கொள்வதால் டிரைவர், கண்டக்டருக்கு தலைவலி அதிகரித்தது. படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோபி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டவுன் பஸ்களில் இரு வழியிலும் கதவு பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது 90 சதவீத பஸ்களில் கதவுகள் பொருத்தும் பணி நிறைவடைந்து உள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் மீதமுள்ள பஸ்களுக்கும் கதவுகள் பொருத்தப்பட்டு விடும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு பயணிகளும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.