மேம்பால சுவரில் ஆம்னி பஸ் மோதி விபத்து!

பொய்கை அருகே மேம்பால சுவரில் ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-12 05:48 GMT

விபத்துக்குள்ளான பேருந்து 

பெங்களூருவில் இருந்து 26 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சை மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மணிக்குமார் ஓட்டினார்.பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் நேற்று காலை வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பால சுவரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒண்ணுபுரம் பி.எஸ்.நகரை சேர்ந்த அருண் (48), அவருடைய மகன் ஹரிராஜ் (17), சென்னை ஆவடியை சேர்ந்த சுமதி (53), சினேகபிரியா (30) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.

விபத்தில் பஸ்சின் முன்பக்கம் சேதம் அடைந்தது. இதைக்கண்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று கிரேன் உதவியுடன் பஸ்சை பள்ளத்தில் இருந்து சாலைக்கு கொண்டு வந்தனர். மற்ற பயணிகள் அனைவரும் அந்த வழியாக சென்ற ஆம்னி பஸ்களில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து இன்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News