வைகுண்ட ஏகாதசி வீரஆஞ்சநேயர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு
சங்ககிரி வீரஆஞ்சநேயர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
Update: 2023-12-24 04:56 GMT
வைகுண்ட ஏகாதசியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி நகர் கிரிகாலனியில் உள்ள அருள்மிகு வீரஆஞ்சநேயர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியையொட்டி அருள்மிகு வீரஆஞ்சநேயர், ராமர், சீதாதேவி, லட்சுமணன் சுவாமிகளுக்கு அதிகாலை முதலே பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டது. அதனையடுத்து பெருமாள் உற்சவ மூர்த்தி சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக பெருமாள் திருப்பள்ளி எழுச்சி உள்பட பல்வேறு பக்திபாடல்கள் பாடி சுவாமி பெருமாள் உற்சவமூர்த்தி கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் சென்று பரமபதவாசல் வழியாக வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் எழுப்பியவாறு சுவாமியை வழிப்பட்டனர். இதில் சங்ககிரி நகர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.