பட்டுக்கோட்டை : விவசாயிகளுக்கு மானியத்தில் ஜிங் சல்பேட் 

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு, 50 விழுக்காடு மானியத்தில் ஜிங் சல்பேட் வழங்கப்படுகிறது.

Update: 2024-01-26 02:51 GMT
துத்தநாகச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நெல் பயிர் 

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,  பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சம்பா, தாளடி அறுவடையைத் தொடர்ந்து விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்யத் தயாராகி வருகின்றனர். ஒரே நிலத்தில் தொடர்ந்து நெல்பயிர் சாகுபடி செய்வதால், நிலத்தில் எப்போதும் நீர் தேங்கி, கரையா உப்புகள் அதிகளவு அதிகரித்து துத்தநாகச் சத்துக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மண்ணில் சுண்ணாம்புத் தன்மை அதிகம் இருந்தால், துத்தநாகச் சத்து, பயிருக்கு கிடைக்க இயலாத நிலை ஏற்படும். \

எனவே, துத்தநாகச் சத்து பற்றாக்குறை இருந்தால், பயிர் வளர்ச்சி குன்றி, இளம் இலைகள் மஞ்சள் நிற கோடுகள் கொண்டதாக மாறிவிடும். பின்னர், காய்ந்து விடும். நடு நரம்பினை ஒட்டிய பகுதிகள் வெண்மை நிறக் கோடுகள் உருவான இலைகள் வெளுத்து காணப்படும். இலைத்தாளின் அகலம் குறைந்து சிறுத்து காணப்படும். நெற்கதிர் தூர்கள் பிடிக்கும் பருவத்தில் தூர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதோடு, மலட்டுத் தன்மையுடன் காணப்படும்.

இதனால், விளைச்சல் குறைவு ஏற்படும். துத்தநாகச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, ஏக்கர் ஒன்றுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் பயிர் நடவுக்கு முன்பு ஒரு முறையும், நடவுக்கு பின் 30 முதல் 40 நாள்களுக்கு ஒரு முறையும் இட்டு, பயிரின் துத்தநாகச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்து பயிரின் மகசூல் இழப்பை தவிர்க்கலாம்.  எனவே, பட்டுக்கோட்டை மற்றும் தாமரங்கோட்டை  வேளாண் விரிவாக்க மையத்தில்  ஜிங் சல்பேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலரை அணுகி 50 விழுக்காடு மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News