விதி மீறும் கனரக வாகனங்களுக்கு அபராதம்
வாலாஜாபாத் சாலையில் விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Update: 2024-02-09 05:08 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், மதுர், சிறுதாமூர் சுற்றுவட்டார கிராமங்களில் தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரஷர், எம்.சாண்ட் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜல்லிக்கற்கள் மற்றும் எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் வாலாஜாபாத் வழியாக செல்கின்றன. கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் சில, விதிமுறைகளை மீறி அதிக லோடு மற்றும் தார்ப்பாய் போர்த்தாமல் இயக்கப்படுகின்றன. இதனால், எம் - சாண்ட் மணல் சாலைகளில் பரவுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செலவோர் பாதிப்படைகின்றனர். இதுகுறித்து தொடர்ந்து புகார் எழும்பியதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள், வாலாஜாபாத் சாலையில் விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினரை வரவழைத்து அதிக லோடு ஏற்றி வரும் லாரிகள் மற்றும் தார்ப்பாய் போர்த்தாமல் எம்.சாண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து வாலாஜாபாத் சாலையில் விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது."