சுங்குவார்சத்திரம் சாலையில் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

சுங்குவார்சத்திரம் சந்திப்பில் நான்கு சாலை சந்திப்பில் ஆறாக ஓடிய கழிவு நீரால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் துர்நாற்றத்தால் அவதி அடைந்தனர்.

Update: 2024-06-13 06:19 GMT

சுங்குவார்சத்திரம் சந்திப்பில் நான்கு சாலை சந்திப்பில் ஆறாக ஓடிய கழிவு நீரால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் துர்நாற்றத்தால் அவதி அடைந்தனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் -- காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத் -- மப்பேடு சாலைகள் இணையும் இடத்தில், சுங்குவார்சத்திரம் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. தனியார் மருத்துவமனை, உணவகம், பூக்கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட சிறு - குறு வணிக நிறுவனங்கள் என, 150க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பல்வேறு தேவைக்காக, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த, பல ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.

அதே போல, ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்கவில் உள்ள, தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், சுங்குவார்சத்திரம் மற்றம் சுற்றுவட்டார பகுதியில் வாடகைக்கு தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் இங்கு, எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், சுங்குவார்சத்திரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், சுங்குவார்சத்திரம் சந்திப்பில் உள்ள மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீருடன், மழைநீர் கலந்து, சாலையில் வெளியேறியது.

நான்கு சாலை சந்திப்பில் ஆறாக ஓடிய கழிவு நீரால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் துர்நாற்றத்தால் அவதி அடைந்தனர். நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வந்தனர். அதே போல, இருசக்கர வாகனத்தில் செல்லும், வாகன ஓட்டிகள் சாலையில் ஓடும் கழிவுநீரில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, சாலையில் வடியும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News