இன்ஸ்டாகிராமில் வீடியோ பரப்பி மிரட்டியவரை கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பரப்பி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். 

Update: 2024-02-05 07:23 GMT

இன்ஸ்டாகிராமில் வீடியோவை பரப்பி மிரட்டியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கரசுப்பு மகன் ஆண்டியா (எ) ஆண்டிகுமார் (22) என்பவர் மீது செய்துங்கநல்லூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஆண்டியா (எ) ஆண்டிகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கெதிராக நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்தால் வெட்டுவேன் என்று மிரட்டும் வகையில், பின்னணியில் சினிமா பாடலை ஒலிக்க வைத்து வீடியோ எடுத்து அதனை பதிவிட்டு மிரட்டி பரப்புவதாக ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன்  மேற்பார்வையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பத்மநாபபிள்ளை தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு ஆண்டியா (எ) ஆண்டிகுமாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆண்டியா (எ) ஆண்டிகுமார் மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகள் என 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News