வாக்குறுதிகள் எதுவும் இல்லாமல் மனு தாக்கல் : ஜெயலலிதா மகள்
தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இல்லாமல் மனு தாக்கல் செய்ய வந்துள்ளதாக மதுரை விமான நிலையத்தில் ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமி தெரிவித்தார்.;
செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா மகள்
கடந்த சில வாரங்களுக்கு முன் தான் ஜெயலலிதாவின் மகள் என பரபரப்பு கிளப்பிய ஜெயலட்சுமி என்பவர் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்திருந்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக மதுரை வந்துள்ளேன். திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். வேறு எந்த அரசியல் கட்சிகள் ஆதரவும் இல்லை.
அரசியல் வருகை குறித்து கேள்விக்கு: அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வந்தேன். தேனி தொகுதியில் போட்டியிடுவதற்கான காரணம் குறித்த கேள்விக்கு: அது அம்மாவுக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டால் எப்போதும் வெற்றி பெறுவார். அதனால் சென்டிமென்டாக அங்கு போட்டியிடுகிறேன்.
தேனி தொகுதியில் வேறு யார் போட்டியிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை நான் போட்டியிடுகிறேன் அவ்வளவுதான். எனக்கு மக்கள் பலம் இருப்பதால் தான் போட்டியிடுகிறேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு: அம்மா கொண்டு வந்த திட்டங்கள் தற்போது நடைபெறவில்லை. கட்சியும் நான்காக பிரிந்துள்ளது.
அதனால் நான் வந்து மீண்டும் அம்மா செய்த திட்டங்களை செய்ய விரும்புகிறேன். தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு: அப்படி எதுவும் இல்லை. டிடிவி தோற்கடிக்க தேனியில் நிற்கிறீர்கள் என்று கேள்விக்கு: நாங்கள் வெற்றி பெற போட்டியிடுகிறோம், யாரையும் தோற்கடிப்பதற்கில்லை.
ஜெயலலிதாவை சந்தித்தபோது அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர்கள் உங்களை பார்த்துள்ளார்களா என்று கேள்விக்கு: பார்த்துள்ளார்கள் ஆனால் ஏன் அதை வெளியில் சொல்லவில்லை என்று தெரியவில்லை.
தற்போதுள்ள அதிமுகவினர் எம்ஜிஆர், ஜெயலலிதா குடும்பத்தை புறக்கணிக்கிறார்கள் என்று கேள்விக்கு: யாரையும் வரவிடவில்லை அதை மீறி நான் வந்துள்ளேன். கட்சியை ஒன்றிணைக்க தான் வந்துள்ளேன். இப்போதைக்கு மாநில கட்சியாக பதிவு செய்துள்ளோம் என்றார்.