ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி தொடக்கம் !
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-03-05 06:50 GMT
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த திருவண்ணாமலை அன்னதானக் குழுவினர் ஆண்டுதோறும் சிவராத்திரிக்கு முன், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வரும் 8ல் சிவராத்திரி நடைபெறுவதையொட்டி, திருவண்ணாமலை அன்னதானக் குழுவினர், குழு செயலர் நடராஜன் தலைமையில், நேற்று, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனர். இதில், கோவில் உட்பிரகாரங்களில் ஒட்டடை அடித்து, பிரகார தரைப்பகுதி, மேல்பகுதி, துாண்கள் உள்ளிட்ட பகுதியில் படிந்திருந்த துாசு மற்றும் எண்ணெய் பிசுக்கு ஏற்பட்ட இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். இக்குழுவினருடன் வேலுார் மாவட்டம், குருவராஜபேட்டை நால்வர் உழவார திருப்பணி மன்றம், திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை அப்பர் உழவார திருப்பணி மன்றத்தினரும் ஒருங்கிணைந்து உழவாரப்பணி மேற்கொண்டனர்."