முதியவரை கல்லால் தாக்கி கொலை முயற்சி !
முதியவரை கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Update: 2024-03-14 11:32 GMT
கன்னியாகுமரி மாவட்டம் லட்சுமிபுரம் அருகே கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (75). இவர் கடந்த இரண்டு ஆண்டாக லட்சுமிபுரத்தில் உள்ள மௌன குருசாமி மடத்தில் வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, அந்த கோயில் பகுதியில் உள்ள மடத்தில் வசித்து வருகிறார். சம்பவ தினம் மதியம் நடராஜன் மௌன குருசாமி மடத்தில் சாப்பிட்டு விட்டு, இரவுக்கும் சேர்த்து அன்னதானம் வாங்கிக் கொண்டு மடத்தில் தூங்குவதற்காக வந்தார். அங்கு இரவு சாப்பிட்டு விட்டு அமர்ந்திருந்தார். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் நெய்யூர் பகுதியை சேர்ந்த சஜித் என்பவர் அங்கு வந்து நடராஜனை அவதூறாக பேசி கல்லால் அவரது நெற்றியில் தாக்கியதாக தெரிகிறது. வலியால் துடித்த நடராஜன் கீழே விழுந்துள்ளார். அப்போது மீண்டும் கல்லை எடுத்து அவரது கையில் போட்டுள்ளார். இதில் அவர் கை மணிக்கட்டில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சுஜித் தப்பி சென்று விட்டார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக, அக்கம் பக்கத்தினர் சேர்த்தனர். தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓட்டிய சுஜித்தை தேடி வருகின்றனர்.