பொன்னேரி : எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

பொன்னேரி அருகே வீட்டின் அருகே எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-05 07:15 GMT

கற்பகம் 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கற்பகம் (50). இவரது கணவர் சேகருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் தமது மகன் நவீனுடன் வசித்து வந்தார். நேற்றிரவு வீட்டின் வெளியே தூங்கிய கற்பகம் இன்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள குட்டையின் ஓரத்தில் தீயில் கருகி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பொன்னேரி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். தீயில் கருகி எரிந்த நிலையில் உள்ள சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் கற்பகத்தின் மகன் நவீன் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், தமது தாயாரை சென்னைக்கு குடி பெயர்ந்து செல்ல அழைத்துள்ளார். சொந்த ஊரை விட்டு வர முடியாது என கற்பகம் மறுப்பு தெரிவித்ததால் கடந்த 2நாட்களாக மகனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு வீட்டின் வெளியே தூங்கிய நிலையில் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் தமது மகனிடம் தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். பின்னர் அதிகாலை பார்த்த போது எரிந்த நிலையில் இருந்ததால் மகனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறை தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பெண் ஒருவர் வீட்டின் அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News