50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை : ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-03 02:35 GMT

மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,: கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்தத் தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு, குஞ்சுபொறிப்பான்), 4 வார குஞ்சுகள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்தச் செலவில் 50 சதவீதம் மானியமாக ரூ.1,56,875 வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கிராமப்புறப் பயனாளிகள், மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கிக் கடன் மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ திரட்ட வேண்டும். தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள், ஓசூர், மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில் சேர விரும்பும் பயனாளிகளுக்கு கோழி கொட்டகை கட்ட குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி தொடர்புடைய கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில் 30 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் அரசு வழங்கிய நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

மேலும் பயனாளி, தனது 50 சதவீத பங்களிப்புக்கான ஆதார ஆவணம், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா , அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கோழிப்பண்ணையை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பராமரிப்பேன் என்ற உத்திரவாதக் கடிதம் ஆகியவற்றை அளிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் நாட்டுக் கோழிகளை 72 வாரங்கள் வளர்த்து 140 முட்டைகள் வீதம் ஆண்டுக்கு 17,500 முட்டைகள் வரை உற்பத்தி செய்ய இயலும். இதில் சுமார் 2,000 முட்டைகளை குஞ்சுபொறிப்பதற்கு பயன்படுத்திக்கொண்டு மீதம் உள்ள முட்டைகளையும் மற்றும் வளர்ந்த சேவல்களையும் இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்துக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி, உரிய ஆவணங்களுடன் 10.7.2024}க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News