குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற கோரிக்கை

கருங்குழி ஆஞ்சநேயர் கோவில் குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-03 14:23 GMT

கருங்குழி ஆஞ்சநேயர் கோவில்குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்,கருங்குழி பேரூராட்சி 14-வது வார்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் குளம் முழுதும் ஆகாய தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது. மேலும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. தண்ணீர் இருப்பதே தெரியாத வகையில், ஆகாய தாமரை படர்ந்து உள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. குளக்கரையை சுற்றி முட்புதர் வளர்ந்து, புதர் மண்டி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி, குப்பை கொட்டும் பகுதியாக மாறி உள்ளதாக, அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும். கருங்குழி   கிணார் சாலையோரம் குளம் உள்ளதால், குளக்கரையை சுற்றி நிழல் தரும் மரங்கள் அமைத்து, நடைபாதை பூங்கா ஏற்படுத்தித் தர வேண்டும். அதோடு, குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, கழிவுகளை அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News