வீட்டின் குடிநீர் தொட்டியில் தாய்-மகள்கள் சடலமாக மீட்பு!
வீட்டின் குடிநீர் தொட்டியில் தாய்-மகள்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
Update: 2024-07-08 08:34 GMT
கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலணி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி புஷ்பா. இத்தம்பதியினருக்கு ஹரிணி (9) மற்றும் ஷிவானி (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் கிடைக்கும் வேலைக்கு சென்று வருகிறார்.புஷ்பா வீட்டு வேலை செய்து வருகிறார்.தங்கராஜ் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தினமும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று காலை தங்கராஜ் அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதாகவும் ஒரு குழந்தையை மீட்ட நிலையில் இன்னொரு குழந்தை மற்றும் மனைவியை மேலே எடுப்பதற்கு உதவி செய்யுங்கள் என்று அணுகியுள்ளார். தங்கராஜ் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தங்கராஜை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசாரின் விசாரணைக்கு பின்னரே முழு விவரங்கள் தெரிய வரும்.