மீனவர்களின் வலைகளில் சிக்கிய ஆமைகள் மீட்பு

மீனவர்களின் வலைகளில் சிக்கிய ஆமைகள் மீட்பு மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு

Update: 2024-04-17 01:51 GMT
மீனவர்களின் வலைகளில் சிக்கிய ஆமைகளை மீட்டு, மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை வடகாடு முதல் குப்பத்தேவன் கிராமம் வரை 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு, 32 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவர்கள், விசைப்படகு, நாட்டுப்படகு மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் கடலில் உள்ள அரிய வகை உயிரினங்களான கடற்பசு, ஆமைகள், கடல் அட்டைகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீனவர்களின் வலைகளில் சிக்கினால் அவற்றை மீண்டும் கடலில் விடுமாறு மவட்ட வனத்துறையினர் அவ்வப்போது மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக மல்லிப்பட்டினம் கடற்கரைப் பகுதியில், சின்னமனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், சுரேஷ், சத்யராஜ் ஆகியோர் படகில் மீன் பிடித்தபோது அவர்களது வலையில் சுமார் 5 கிலோ எடை கொண்ட அபூர்வ வகை கடல் ஆமை சிக்கியது. மீன் வலையை கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது, அதில் ஆமை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆமையை மீனவர்கள் மீண்டும், கடலில் விட்டனர். அதே போல், சோமநாதன்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முத்துராஜ், கமல், வீரமணி, சூர்யா, அண்ணாநகர் புதுத்தெருவைச் சேர்ந்த மதன்ராஜ், முத்துராஜா, புதுப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜான், பால்சாமி, சக்தி ஆகியோர் சென்ற படகிலும் ஆமைகள் வலைகளில் சிக்கியது. கரைக்கு வந்து பார்த்தபோது ஆமைகள் இருந்ததால், இந்த ஆமைகளை மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு வீடியோ எடுத்து அந்த தகவலை பகிர்ந்து கொண்டனர். இதையடுத்து பட்டுக்கோட்டை வனச்சரகர் சந்திரசேகரன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் மத்தியில் அரியவகை கடல் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பாக வனத்துறை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி இரு தினங்களுக்கு முன்பு கடலில் உள்ள ஆமைகள் மீனவர்களின் வலையில் சிக்கி, அதனை மீட்டு மீண்டும் கடலில் விட்டதை வீடியோ எடுத்து அனுப்பினர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அகில் தம்பிக்கும் இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு வனத்துறை சார்பாக அடுத்த மாதம் நடைபெற உள்ள கடற்பசு தினத்தில்  ஊக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது என்றார். மண்ணுளி பாம்பு  தஞ்சாவூர் வனக்கோட்டம் பட்டுக்கோட்டை வனச்சரகம் , பேராவூரணி தாலுகா குப்பத்தேவன் பஞ்சாயத்து செல்லப்பிள்ளையார் கோவில் அருகே மண்ணுளிப் பாம்பு உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், அக்கிராமத்தை சேர்ந்த நாகராஜன், ரஞ்சித்குமார் ஆகியோர் இடத்தில் இருந்து வனத்துறை விரைந்து சென்று மண்ணுளிப் பாம்பை மீட்டு நல்ல நிலையில் காட்டுப்பகுதியில் விடப்பட்டது.
Tags:    

Similar News