கிராமசாலை துண்டிப்பு – வருவாய்த்துறையினர் புகார்

திருவள்ளூர் மாவட்டம், கிருஷ்ணமராஜ் நகரில் தனிநபர் ஜேசிபி மூலம் கிராம சாலையை துண்டித்ததையடுத்து காவல்நிலையத்தில் வருவாய்த்துறையினர் புகார் அளித்துள்ளனர்.

Update: 2024-02-25 04:18 GMT

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு 

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே கதனநகரம் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணமராஜ் நகர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள எஸ்.கே.வி.கண்டிகை முதல் கிருஷ்ணமராஜ் நகர் வரை செல்லும் ஊராட்சி சாலையை நேற்று இரவு ஜே.சி.பி.இயந்திரம் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவர் துண்டித்து சாலைக்கு நடுவில் குழி வெட்டப்பட்டுள்ளதாவும், இதனால் கிராம மக்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் புகாரின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம சாலையை துண்டித்து குழி தோண்டப்பட்டுள்ள பகுதியில் பார்வையிட்டு உடனடியாக சாலை சீரமைக்க ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

பொது சாலையை சேதப்படுத்திய நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News