சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான கையெழுத்து பிரச்சார இயக்கம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கையெழுத்து பிரச்சார இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

Update: 2024-06-27 05:09 GMT

கையெழுத்து இயக்கம் 

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 1989 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் இது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நான் போதைப்பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். குழந்தைகளையும், நண்பர்களையும் போதைக்கு ஆளாகாமல் தடுத்து நிறுத்துவேன்.

மாவட்டத்தில் போதை பொருட்களை வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்ட கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர், சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து தகவல் தெரிவிக்க 04562 252525, 04562 252011 மற்றும் 04562 293946 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags:    

Similar News