சாத்தூர் அருகே பெற்றோர் அடித்ததில் மகன் பலி: போலீசார் விசாரணை

சாத்தூர் அருகே குடிபோதையில் தாய் தந்தையிடம் தகராறு செய்த மகனை அடித்ததில் பலியானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2024-06-13 11:22 GMT

காவல் நிலையம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் அய்யனார் . இவர் தனது தந்தையுடன் கட்டிடம் கட்டும் பணியில் (சென்ட்ரிங்) வேலை செய்து வருகிறார்.

வேலைக்கு சென்றாலும் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான அய்யனார் வீட்டில் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கமாக இருந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று அய்யனார் வீட்டில் ரூபாய் ஐந்து லட்சம் கேட்டு தகராறு செய்ததாகவும் அப்போது அவருடன் வாக்குவாதத்தில்,

ஈடுபட்ட அவரது பாட்டியை அய்யனார் தாக்கியதாகவும் தெரிய வருகிறது. இதில் ஆத்திரமடைந்த அய்யனாரின் தந்தை சுப்பிரமணியன் (46) மற்றும் தாய் பேச்சியம்மாள் (40) ஆகியோர் கோபத்தில் அய்யனாரை தாக்கியுள்ளனர்.

அப்போது நடந்த சண்டையில் அய்யனார் தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக தெரிய வருகிறது. இதனை அடுத்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அய்யனார் உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பெற்றோர் இருவரையும் கைது செய்த ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதைக்கு அடிமையான மகனை பெற்றோர் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News