பரமத்தி வேலூர்: லாரி கவிழ்ந்து 4 பேர்கள் படுகாயம்.

பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையம் அருகே லாரி கவிழ்ந்து 4 பேர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2024-05-06 19:54 GMT

கோப்பு படம்

பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பச்சாக்கவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40), இவரது மனைவி ஜெயந்தி (35), அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி சாந்தி (44) ஆகியோர் கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் சேம்பர் செங்கல் தயாரிக்கும் ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.

 அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்கிற குப்புசாமி (40) என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் சேம்பர் செங்கல் ஆலையில் செங்கலை ஏற்றிக் கொண்டு அதன் மேல் மூன்று தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு லாரி டிரைவர் குப்புசாமி ஆலையில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர் குப்புசாமி, கூலித் தொழிலாளர்கள் மணிகண்டன், அவரது மனைவி ஜெயந்தி மற்றும் சாந்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி ஜெயந்தி மற்றும் டிரைவர் குப்புசாமி ஆகியோர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், மணிகண்டன் மற்றும் சாந்தி ஆகியோர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News