மோடிக்கு ஆதரவு அதிகரித்து உள்ளது- எல்.முருகன்

நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Update: 2024-05-24 13:41 GMT

பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சருமான டாக்டர் எல்.முருகன் இன்று (24.5.2024) நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து தமது சொந்த கிராமமான கே.புதுப்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலிலும், நாமக்கல்லில் உள்ள லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.இதன் பின்னர் நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன் கூறும் போது, பாரத தேச முழுவதும் பிரமாண்டமான ஜனநாயகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

ஐந்தாம் கட்ட தேர்தலிலேயே நமது பாரத பிரதமர் பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை வென்று விட்டோம். மற்ற தொகுதிகளிலும் சேர்த்து 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி. வளர்ச்சி அடைந்த பாதுகாப்பான முன்னேறிய தேசமாக மாறுவதற்கு மூன்றாவது முறையாக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமராவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேசம் முழுவதும் மோடி ஆதரவு அலை இருந்து கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்த தேர்தல் மக்கள் வளர்ச்சியை விரும்பி கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர். தேசத்தின் வளர்ச்சி, தேசத்தின் முன்னேற்றம், அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றை மக்கள் கவனித்து வருகிறார்கள்.கடந்த பத்தாண்டுகளில் 25 கோடி பேர் வறுமை கோட்டிற்கு மேல் உயர்ந்துள்ளனர். ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு உள்ளது. இதையெல்லாம் பொதுமக்கள் கருத்தில் கொண்டு தேர்தலை சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே இந்த தேசத்தை பாதுகாக்க முடியும் மேம்படுத்த முடியும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணி கிடைத்துள்ளது. தேசம் முழுவதும் மிகப்பெரிய ஆதரவு அலை பிரதமர் நரேந்திர மோடிக்கு இருந்து கொண்டுள்ளது.ஒரிசா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழ்நாடு முதலமைச்சர் தவறான விஷயத்தை மக்களிடம் திணிக்க முயற்சிக்கிறார். இது முதலமைச்சருக்கு அழகல்ல.

பிரதமர் என்ன சொன்னார் என்பதை புரிந்து கொண்டு முதல்வர் பேச வேண்டும். சிறிய புரிதல் கூட இல்லாமல் முதல்வர் பேசுவது வெட்கி தலை குனிய கூடிய சம்பவமாக நான் பார்க்கின்றேன். ஒரிசாவின் முக்கிய ஆட்சி பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் சாவி உள்ளது என்று அர்த்தத்தில் தான் பிரதமர் கூறியுள்ளார். தமிழரையோ தமிழ்நாட்டைப் பற்றியோ தவறாக ஏதும் கூறவில்லை. தமிழரையும் தமிழ்நாட்டு மக்களையும் தமிழ்நாட்டையும் போற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதனால்தான் திருக்குறளை பரப்புவதற்கு ஆராய்ச்சி மையம் உலகம் முழுவதும் கலாச்சார மையங்கள் திருக்குறளுக்காக அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 35 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்து உலகம் முழுவதும் அளித்துள்ளார். எந்த பிரதமராவது பொங்கல் விழா கொண்டாடி உள்ளாரா? நமது பிரதமர், நாமக்கல் அருகே உள்ள ஒரு குக்கிராமான கோனூர் கிராமத்தில் இருந்து சென்ற விவசாயி மகன் வீட்டில் பிரதமர் பொங்கல் விழா கொண்டாடினார்.

தமிழர் பண்பாட்டிற்கு மிகப்பெரிய கௌரவம் கொடுத்துள்ளவர் நமது பாரத பிரதமர். தமிழ்நாட்டின் வளர்ச்சி மேம்பாட்டுக்காக கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாடு வளர்ச்சிக்காக மேம்பாட்டுக்காக பிரதமர் அளித்துள்ளார். அதனால் தமிழை தமிழ் மக்களையும் கட்டிக்காப்பதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் நாமக்கல்லில் பாஜக முக்கிய தலைவரும் இணை அமைச்சருமான டாக்டர் எல்.முருகன் நாமக்கலில் பேட்டிபோது தெரிவித்தார்.இந்த பேட்டியின் போது பாஜக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் கே.பி ராமலிங்கம் , நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News