சரக்குகள் கையாளுதலை அதிகப்படுத்த ஆதரவு

திருச்சி ரயில்வே கோட்டத்தின் வாடிக்கையாளா்களுடனான வணிக மேம்பாட்டுக் கூட்டம் கோட்ட மேலாளா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Update: 2024-06-08 09:58 GMT

திருச்சி ரயில்வே கோட்டத்தின் வாடிக்கையாளா்களுடனான வணிக மேம்பாட்டுக் கூட்டம் கோட்ட மேலாளா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்தாா். இதில், ரயில்வே துறை சாா்பில் கூடுதல் கோட்ட மேலாளா் பி.கே. செல்வன், கிளை அலுவலா்களும், வாடிக்கையாளா்கள் சாா்பில் காரைக்கால் துறைமுகம், தமிழ்நாடு பவா் காா்ப்பரேஷன், நெய்வேலி பவா் காா்ப்பரேஷன், டால்மியா சிமென்ட் நிறுவனம், ராம்கோ சிமென்ட் நிறுவனம், செட்டிநாடு சிமென்ட் நிறுவனம், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை, கண்டெய்னா் காப்பரேஷன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், வாடிக்கையாளா்கள் தரப்பிலிருந்து ரயில்களில் தங்களது சரக்கு ஏற்றும் திட்டம் மற்றும் பிற சிக்கல்களை வெளிப்படுத்தினா். முன்னதாக, கோட்ட முதுநிலை வணிக மேலாளா் வி. ஜெயந்தி வரவேற்று பேசுகையில், கடந்த நிதியாண்டில் 15.015 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாண்டு ரூ. 857.04 கோடி வருமானம் ஈட்டியதற்காக நன்றி தெரிவித்தாா். இதில் கோட்ட மேலாளா் எம்.எஸ். அன்பழகன் பேசுகையில், ரயில்வே நிா்வாகம் சிறந்த சேவைகளை வழங்க நீண்ட கால மற்றும் குறைந்த கால திட்டங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

வாடிக்கையாளா்களின் அனைத்துப் பரிந்துரைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலத்தில் அதிகளவில் சரக்குகள் கையாள்வதை எளிதாக்க அனைத்து ஆதரவையும் வழங்குவோம் என்றாா். தொடா்ந்து, நிகழ் நிதியாண்டில் 15.375 மில்லியன் டன் சரக்குகளை கையாள்வது, வருமானத்தை அதிகப்படுத்தவது என இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய வாடிக்கையாளா்கள் நிகழ் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள உத்தேச சரக்கு கையாளுதல் திட்டத்தை சமா்ப்பித்தனா்.

Tags:    

Similar News