அதிமுக கூட்டணியில் பாஜ.,வுக்கான கதவு அடைப்பு

அதிமுக கூட்டணியில் பாஜ.,வுக்கான கதவு அடைப்பு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2024-02-07 15:43 GMT

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான கதவு மூடப்பட்டுவிட்டது என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

தஞ்சாவூரில் அதிமுக சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: எங்களுடைய முன்னோடிகளான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி சிறுமைப்படுத்தும் விதமாக ஒரு மாநிலத் தலைவர் கடுமையான அளவுக்கு விமர்சனம் செய்தார்.

அவருக்கு கண்டனங்கள் தெரிவித்தபோதும் தொடர்ச்சியாக எங்களைச் சிறுமைப்படுத்திய தலைவரை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதிபலித்தது. இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் இப்போது மட்டுமல்லாமல், எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, உலகத்துக்கே அறிவிக்கப்பட்டது.  இதைத் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.

கூட்டணியின் கதவுகள் திறந்துள்ளது என அமித்ஷா தனது கட்சியின் நிலைப்பாட்டை கூறியிருக்கலாம். ஆனால், எங்கள் கட்சி நிலைப்பாட்டைப் பொறுத்தவரை பாஜகவுடன் இப்போது மட்டுமல்ல, எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. நாங்கள் எப்போதும் முன் வைத்த காலை பின் வாங்க மாட்டோம். இரட்டை இலையை முடக்க முடியாது: ஓ. பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சகட்டத்தில் இருப்பதால், அவர் பேசுவதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சியுடன் இருப்பதை பாஜகவின் கொத்தடிமையாக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இரட்டை இலை சின்னத்தை எந்தக் கொம்பனாலும் முடக்க முடியாது என்றார்" ஜெயக்குமார்.

Tags:    

Similar News