தாலிச் செயினை பறித்து தப்ப முயன்ற நபரை பிடித்து தர்ம அடி!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே கச்சேரி வீதியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண் செவிலியரிடம் செல்போன் மற்றும் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற நபரை மடக்கிப்பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2024-07-11 12:16 GMT

செயின் பறிப்பு முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே கச்சேரி வீதியை சேர்ந்தவர் கேண்டினாமேரி (37) இவர் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றுள்ளார்.

அப்பொழுது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் கேண்டினாமேரியின் பின்னால் இருந்து வந்தவர் வண்டியை நிறுத்திவிட்டு கேண்டிணாமேரியின் செல்போன் மூன்றரை பவுன் தாலிச் செயின் ஐந்து பவுன் ஆரம் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற பொழுது சுதாரித்துக் கொண்ட கேண்டிணாமேரி இரு சக்கர வாகனத்தை கீழே தள்ளி கூச்சலிட்டுள்ளார்.

அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து செல்போன் மற்றும் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நபரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து காவலரிடம் ஒப்படைத்தனர். போலீசார் திருட்டில் ஈடுபட்ட இருசக்கர வாகனத்தை கைப்பற்றி பரிசோதனை செய்த பொழுது அதில் இரண்டு இரு சக்கர வாகன நம்பர் பிளேட்டுகள் உள்ளதும் தெரிய வந்தது.

போலீசார் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா மேல மணக்குடி சக்க வயல் பகுதியை சேர்ந்த சேகரன் மகன் ராஜகோபால் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் செவிலியரிடம் செல்போன் மற்றும் மூன்றரை பவுன் தாலிச் செயின் ஐந்து பவுன் ஆரம் உள்ளிட்டவைகளை பறித்து சென்ற நபரால் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News