அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்ந்துள்ளதால் அரசியல் கட்சியினர் பள்ளிபாளையத்தில் கொடிக்கம்பங்களை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்;
மீண்டும் நடப்படும் கட்சி கொடிகள்
பாராளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு இருந்தது. ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று வார காலத்திற்கு மேல் ஆகி உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்வு அடைந்துள்ளதால், அரசியல் கட்சியினர் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். .
அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி உட்பட்ட 21 வார்டுகளிலும், கொடிக்கம்பங்களை அமைக்கும் பணியில் பள்ளிபாளையம் நகர பாட்டாளி மக்கள் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே போல மற்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், நகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தங்கள் கட்சி கொடி கம்பங்களை அமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.