கன்னங்குறிச்சி அருகே டீக்கடைக்காரர் வீட்டில் 26½ பவுன் நகை திருட்டு !

கன்னங்குறிச்சி அருகே டீக்கடைக்காரர் வீட்டில் 26½ பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-03-27 09:27 GMT

காவல் துறை

சேலம் கன்னங்குறிச்சி புதுஏரி ரோடு, ஈஸ்வரன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். ஏற்காடு ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று இருந்தார். பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் உள்ளே வைத்திருந்த 26½ பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைவதும், சிறிது நேரம் கழித்து வெளியே செல்வதும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News