குரும்பபட்டி உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் விடுமுறையையொட்டி குரும்பபட்டி உயிரியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர்.;
Update: 2024-01-17 01:29 GMT
உயிரியல் பூங்கா
பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்தனர். இதனால், சேலம்மாவட்டத்தில் மேட்டூர், ஏற்காடு, ஆணைவாரி முட்டல் உள்பட பல்வேறு இடங்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். இந்த பூங்காவிற்கு வழக்கமாக செவ்வாய்கிழமை தோறும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் பூங்காவிற்கு அதிகளவு வருகை புரிந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள 200க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவையினங்களை கண்டு மகிழ்ந்தனர். மேலும் குழந்தைகள், சிறுவர்கள் அங்குள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.