கட்டுப்பாடற்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் !
ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் கடக்கும் சூழலில் கட்டுப்பாடற்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
Update: 2024-03-13 10:39 GMT
திருக்கழுக்குன்றத்தில் தாலுகா, பேரூராட்சி, வட்டார வளர்ச்சி, சார் - பதிவாளர் என, அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்டவை இயங்குகின்றன. இப்பகுதி போக்குவரத்தில் சதுரங்கப்பட்டினம் சாலை பிரதானமாக உள்ளது. குறுகிய சாலையில் பெருகியுள்ள ஆக்கிரமிப்புகள், முக்கிய சந்திப்பு பகுதிகள் நெருக்கடி ஆகிய காரணங்களால், நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து முடங்குகிறது. இச்சாலையில், குறுகிய தொலைவிற்குள், மாமல்லபுரம் சாலை, அடுத்து சன்னிதி தெரு, இறுதியில் கருங்குழி சாலை ஆகியவை இணைந்துள்ளன. சதுரங்கப்பட்டினம் சாலை பகுதி, முக்கிய வர்த்தக பகுதியாகவும் உள்ள நிலையில், அதன் இருபுறமும் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் சாலை குறுகியுள்ளது. சந்திப்பு பகுதிகளிலும், சாலை பகுதி அகலமின்றி, கடும் நெருக்கடியுடன்உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் கடக்கும் சூழலில், கட்டுப்பாடற்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டுனர்கள், போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்தி, சாலைகள், சந்திப்புகள் குறுகியவை பற்றி கவனத்தில் கொள்வதில்லை. வாகனத்தை வேகமாக ஓட்டி, முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி, சந்திப்பிலும், வளைவிலும் தான்தோன்றித்தனமாக திரும்பி, திடீரென குறுக்கில் கடந்து செல்கின்றனர்.