பேத்தியை தங்களுடன் அனுப்ப கூறி தகராறு செய்த திருநங்கை-வாலிபருக்கு கத்திகுத்து !
பேத்தியை தங்களுடன் அனுப்ப கூறி தகராறு செய்த திருநங்கை வாலிபருக்கு கத்திகுத்து - முதியவர் கைது
Update: 2024-04-11 05:26 GMT
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் திருநங்கை ஸ்ரேயா (வயது 29). இவர் பொன்னம்மாபேட்டை பகுதியில் திருநங்கைகள் சிலருடன் வாடகை வீட்டில் தங்கியிருந்து வருகிறார். அந்த வீட்டில் 17 வயது சிறுமி ஒருவரும் தங்கி உள்ளார். இதனிடையே அந்த சிறுமி அங்கிருந்து திடீரென வெளியேறினார். இந்த சிறுமி பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 67) என்பவரின் பேத்தி ஆவார். இதனால் திருநங்கைகள் சிலர் அடிக்கடி பெருமாள் வீட்டுக்கு சென்று சிறுமியை தங்களுடன் அனுப்புமாறு கூறி வந்தனர். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு ஸ்ரேயா, கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த வல்லரசு (27) என்பவருடன் வந்தார். அப்போது அவர் பெருமாளிடம், உங்களது பேத்தி எனது வீட்டில் இருந்து செல்போன் மற்றும் ½ பவுன் நகையை திருடி வந்துவிட்டார் என்றார். இதற்கு அந்த முதியவர் தற்போது பேத்தி வீட்டில் இல்லை என்றார். ஆனால் ஸ்ரேயா, வல்லரசு ஆகியோர் அவரிடம் பேத்தியை அனுப்புமாறு கூறி தகராறு செய்தனர். மேலும் பெருமாள் மனைவி செல்வியை அவர்கள் கீழே பிடித்து தள்ளினர். இதில் ஆத்திரமடைந்த பெருமாள் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஸ்ரேயா, வல்லரசு ஆகியோரை சரமாரியாக குத்தினார். இதையடுத்து படுகாயம் அடைந்த அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப்பதிந்து பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.