எதிரெதிரே மோதிய டூ விலர்கள் - பணம் கேட்டு அடிதடி ரகளை !
எதிரெதிரே மோதிய டூ விலர்கள் விபத்தில் பணம் கேட்டு அடிதடி ரகளையில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-03-07 09:28 GMT
சேலம் பனங்காடு நாழிக்கல்பட்டி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 32). இவரது நண்பர் மணிகண்டன். இவர்கள் இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மன்னார்பாளையம் பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, சத்யா காலனி காளியம்மன் கோவில் அருகே வந்தபோது, அவ்வழியாக 3 பேருடன் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் வினோத், மணிகண்டன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு 2 பேரும் மீண்டும் அந்த பகுதிக்கு வந்தனர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய அம்மாப்பேட்டை சத்யா நகரை சேர்ந்த சதீஸ்குமார் (30), தீனதயாளன் (32), கொய்யாதோப்பு பகுதியை சேர்ந்த தங்கராஜ் (33), சரவணன் (31) ஆகியோர் ரூ.15 ஆயிரம் கேட்டு வினோத்தை மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பணம் தரமுடியாது என்று கூறினார். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் இரும்பு ராடால் வினோத் மற்றும் மணிகண்டனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக வீராணம் போலீசில் வினோத் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட சதீஸ்குமார், தீனதயாளன், தங்கராஜ் மற்றும் சரவணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.