டூவீலருடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி

குடியாத்தம் அருகே டூ வீலருடன் பள்ளத்தில் விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-26 15:59 GMT

பலியானவர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சேத்துவண்டை கிராமத்தைச் சார்ந்தவர் அஜித்குமார் (27). இவரது நண்பர் ராமாலை பகுதியை சேர்ந்த உதய் இருவரும் காட்பாடியில் வேலை செய்து வரும் நிலையில், பணி முடித்துவிட்டு மோட்டார்சைச்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது இரவு நேரமாகிவிட்டதால் உதயை அவரது கிராமத்தில் விடுவதற்காக ராமாலை கிராமத்திற்கு சென்று அவரை விட்டுவிட்டு ஊருக்கு சென்றார். உதயை ராமாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிய அஜித்குமார் குடியாத்தம்- சித்தூர் சாலையில் அரபிக் கல்லூரி அருகே புறவழிச் சாலை கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மோட்டார்சைக்கிளுடன் விழுந்துள்ளார். அவரது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அஜித்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் அஜித்குமாரின் உறவினர்கள், சேத்துவண்டை கிராம பொதுமக்கள் குடியாத்தம்- சித்தூர் சாலையில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News