திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வருஷாபிஷேகம் விழா
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Update: 2024-02-02 07:22 GMT
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்க டாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் 5-வது ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்றது. இதனையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவையும், அதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு புண்ணியாக வாசனமும், அஸ்டோத்ரா பூஜையும், ஹோமமும், 10 மணிக்கு சதா கலசாபிஷேக பூஜையும் நடந்தது. அதன்பின்னர் சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதலும், 11 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது.தொடர்ந்து ஹோமம், யாகம், அபிஷேகம் போன்றவைகளும் நடந்தது. பகல் 12 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இந்த பூஜைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் சீத்தாராம ஆச்சாரியர் தலைமையில் திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் மற்றும் கன்னியாகுமரி ஸ்ரீவெங்கடேஸ்வரபெருமாள் கோவில் அர்ச்சகர்களும் நடத்துகிறார்கள். பின்னர் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.