கிடப்பில் பேரீஞ்சம்பாக்கம் சாலை பணி - கிராம மக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதுாரில் சேதமான சாலையை சீரமைக்க கிராம மக்கள் தொடர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-02-28 07:02 GMT

சேதமடைந்த சாலை 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில் 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள பிரதான சாலை வழியே, தத்தனுார், வளத்தான்சேரி, பாதிரிமேடு, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அதே போல பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் இச்சாலையை பயன்படுத்தி கரணித்தாங்கல் வழியே வண்டலுார் - வாலாஜாபத் சாலை வந்தடைகின்றனர். இந்த நிலையில், பல ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக இருந்தது. இச்சாலையை பயன்படுத்தி செல்லும் பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் சேதமான சாலையை சீரமைக்க கிராம மக்கள் தொடர் கோரிகை விடுத்து வந்தனர். இதையடுத்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில், 38.41 லட்சம் ரூபாய் மதிப்பில், கடந்த ஆண்டு அக்., மாதம் சாலையை சீரமைக்கும் பணியினை ஊராட்சி நிர்வாகம் தொடங்கியது. இந்த நிலையில், நான்கு மாதங்களுக்கு முன், தார் சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டது. இதையடுத்து பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ஜல்லிகள் கொட்டப்பட்ட சாலையில், இருசக்கர வாகனங்களில் செல்லும் பெற்றோர், பெண்கள், வயதானோர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியினை விரைந்து முடித்து, தார் சாலையினை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News