எஸ்பிக்கு கிராம மக்கள் பாராட்டு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் சிறந்து செயல்பட்ட எஸ்பிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2024-03-01 10:58 GMT
பாராட்டிய போது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த 25.01.2024ம் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னப்பன் உள்ளிட்ட ஐவர் மீது தாக்கி கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாக காளையார்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க எஸ்பி அரவிந்த், உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

காவல் துறையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் தென்னீர்வயலை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை விசாரணை செய்த போது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதின் பேரில், அவரை கைது செய்து அவர் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவர் கொள்ளையடித்துச்சென்ற நகை, பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும் கடந்த 13.07.2020ல் முடுக்கூரணியில் நடந்த இரட்டை கொலை, அதே போல் கடந்த 10.01.2023ம் தேதி கண்ணங்கோட்டையில் நடந்த இரட்டை கொலை ஆகிய சம்பவங்களில் தினேஷ்குமார் ஈடுபட்டது. அவரது வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்து கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொண்ட எஸ்பி அரவிந்த் மற்றும் காவல் துறையினருக்கு கல்லுவழி கிராமத்தைச்சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நன்றி தெரிவித்ததுடன் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News