வீணாகும் திருப்பாற்கடல் பாலாறு குடிநீர்

தக்கோலம் மற்றும் அரக்கோணம் பகுதியில் இருக்கும் மத்திய பாதுகாப்பு படை குடியிருப்புகளுக்கு செல்லும் பாலாறு குடிநீர் குழாயின் ஏர் வால்வில் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.

Update: 2024-06-27 02:41 GMT

சாலையில் ஓடும் குடிநீர் 

காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தார் சாலை போடாத இடத்தில், எம் - சாண்ட் கொட்டி பேவர் பிளாக் கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகு படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த சாலை ஓரத்தில், ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பாற்கடல் பகுதியில் இருந்து, பாலாறு குடிநீர், தக்கோலம் மற்றும் அரக்கோணம் பகுதியில் இருக்கும் மத்திய பாதுகாப்பு படை குடியிருப்புகளுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த குழாய்களின் ஏர்வால்வில் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுபோன்று வெளியேறும் தண்ணீர், காஞ்சிபுரம்- - அரக்கோணம் சாலை செல்லும் வாகன ஓட்டிகளை நனைக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, வீணாக வெளியேறும் தண்ணீரை உபயோகமாக பயன்படுத்தும் வகையில், சரி செய்து கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News