வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் போது தோல்பையில் தண்ணீர் பாய்ச்சணும்

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தின் போது, தோல்பை வைத்து மட்டுமே தண்ணீர் அடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2024-04-03 15:26 GMT

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தின் போது, தோல்பை வைத்து மட்டுமே தண்ணீர் அடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, 'சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி, துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி, தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி, தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

எனவே, இந்த ஆண்டு தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள், அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்படுகிறது. பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும்.

தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன்பதிவு செய்ய வேண்டும். கள்ளழகர், அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எங்கும் தண்ணீர் பீய்ச்ச கூடாது என்றார்.

Tags:    

Similar News