ஏற்காட்டில் மகளிர் விடியல் பயணத் திட்ட பஸ் சேவை

ஏற்காட்டில் மகளிர் விடியல் பயணத் திட்ட பஸ் சேவையை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2024-03-15 08:46 GMT

ஏற்காட்டில் மகளிர் விடியல் பயணத் திட்ட பஸ் சேவையை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.


சேலம் மாவட்டம் ஏற்காடு மலைக் கிராம மகளிர் பயன்பெறும் வகையில் மகளிர் விடியல் பயணத் திட்ட பஸ் சேவை தொடக்க விழா ஏற்காடு பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. இதில், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கொடியசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வரிசையில் சாதாரண அரசு டவுன் பஸ்களில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் விடியல் பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது மலைப் பகுதிகளில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏற்காடு மலைப் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு மலைப் பகுதிகளில் வசிக்கும் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிர் விடியல் பயணத் திட்டம் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏற்காடு மலைப்பகுதிகளில் வாழும் சுமார் 65 கிராமங்களை சேர்ந்த மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், துணை மேலாளர்கள் சிவலிங்கம், மணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதேபோல, கருமந்துறை மலைப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 98 கிராமங்களை சேர்ந்த மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் மகளிர் விடியல் பயணத் திட்ட பஸ் சேவையை ஆத்தூர் உதவி கலெக்டர் பிரியதர்ஷினி நேற்று தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News