இளைஞர் அணி மாநாடு பேனர் மறைப்பு - திமுகவினர் இடையே சலசலப்பு

திமுக இளைஞர் அணி மாநாடு பேனரை மறைத்தாக திருச்சியில் இரு அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.;

Update: 2023-11-28 03:13 GMT

குடமுருட்டி சேகர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளரும், முன்னாள் கம்பரசம்பேட்டை ஊராட்சிமன்ற தலைவரும், ஸ்ரீரங்கம் கோயிலின் முன்னாள் அறங்காவலருமான இருந்தவர் குடமுருட்டி சேகர். 15 வருடத்திற்கு மேலாக திமுக மாவட்ட துணை செயலாளராக இருந்தார். தற்பொழுது அவர் எந்த பதவிகளிலும் இல்லை. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அமைச்சர்கள் கே என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என இரு அணியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான குடமுருட்டி  சேகரின் பதவியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி பறித்து விட்டதாகவும், அந்தப் பதவியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளருக்கு கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு "உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால்தான் பலனுண்டு. கிடைத்தவனை கொண்டு நடத்தினால் பயனில்லை "என்ற அறிஞர் அண்ணாவின் வசனத்துடன் குலமுருட்டி சேகர் ஒரு பேனர் வைத்திருந்தார் இது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் குடமுருட்டி பாலம் அருகே சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாடு குறித்த பேனர் குடமுருட்டி சார்பில் நீண்ட நாட்களாக அங்கு வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த பேனரை மறைத்து வைத்து திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதவாளர்கள் பேனர் வைக்க முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடமுறட்டி சேகர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisement

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த குடமுருட்டி. சேகர், திருச்சி மாவட்டத்தை மூன்றாக பிரித்ததால் திமுகவினர் இடையே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும் , பள்ளி கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கக்கூடிய அன்பில் மகேஷ் தான். திருச்சியில் திமுக கட்சியை தனது உதவியாளரிடம் விற்று விட்டார் திமுகவில் உண்மையாக உழைத்தவர்கள், யாருக்கும் பதவி வழங்கப்படவில்லை. திமுக கட்சியை வளர்க்கிறேன் என்று சொல்லி மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டுவதே வழக்கமாக வைத்துள்ளார்கள். திமுக கட்சியில் கடந்த 40 வருடங்களாக உண்மையாக உழைத்து, விசுவாசியாக இருந்து பல்வேறு வழக்குகளை சந்தித்த எனக்கு எந்த மரியாதையும் பதவியும் வழங்கப்படவில்லை. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அமைச்சர் நேரு ஸ்டாலின் ஆதரவாளராக இருக்கிறார். அதேபோன்று உதயநிதி ஆதரவாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் இருக்கிறார். திருச்சி திமுக கட்சியில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை தலைமை இடத்திற்கு கொண்டு செல்லாமல் இவர்கள் மூடி மறைக்கிறார்கள், காரணம் என்ன என்றே தெரியாமல் நிர்வாகிகள் புலம்புகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவருடைய உதவியாளர் அருண் ஆகிய இருவரால் , கட்சியின் மூத்த நிர்வாகிகள், உண்மையான பலர் விசுவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் நேரு அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மறைந்த முன்னாள் தலைவர் கலைஞர் இருந்திருந்தால் இத்தகைய பிரச்சனை ஏற்பட்டிருக்காது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்ன கூறினாலும் கட்சியில் இருக்கக்கூடிய மாவட்டத்தை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே உண்மையாக உழைக்கக்கூடிய தொண்டர்களுக்கு எந்த பொறுப்புகளையும் வழங்கவில்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News