ரோட்டரி சங்க தலைவரை பெட்ரோல் ஊற்றி எரிப்பு உயிருக்கு போராட்டம்

தரங்கம்பாடியில் நேற்று இரவு  மாசிலாமணி நாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற பொறையார் ரோட்டரி சங்க தலைவரை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிப்பு , 65% தீக்காயங்களுடன் உயிருக்கு போராட்டம் , போற யார் போலீசார் விசாரணை .

Update: 2024-07-27 11:51 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே விநாயகர்பாளையம் பகுதியை  சேர்ந்தவர் அருண்குமார்(42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான அருண்குமார் பொறையார் ரோட்டரி சங்கத் தலைவராக பொறுப்பில் உள்ளார். வாடகை பாத்திர கடை நடத்தி வரும் இவர் ஜோசியமும் பார்த்து வருகிறார். அருண் தரங்கம்பாடி கடற்கரையில் பழமை மிக்க மாசிலாமணி நாதர் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் அருண் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது. அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள் அருண் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி சென்றதாக அருண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதில் 65 சதவீதம் தீக்காயமடைந்த  அருணை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில்  கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். முன் விரோதத்தால் இச்சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா, தொழில்முறை போட்டியால் நடைபெற்றதா என்பது குறித்து பொறையார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News