பா.......தாள... சாக்கடை, கட்டி முடிக்கப்படாத பேருந்து நிலையம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்னை, தரமற்ற சாலைகள், கட்டிமுடிக்கப்படாத பஸ் நிலைய பணிகள் மற்றும் தொடங்கப்படாத புறவழிச்சாலை ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கேட்டு மாவட்ட வளர்ச்சிக்குழு மற்றும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2024-07-27 12:03 GMT
. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் முரளிதரன் தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தமிழர் தேசிய முன்னணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை நகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும். மயிலாடுதுறையில் சேதமடைந்துள்ள சாலைகளை புதுப்பித்துத் தர வேண்டும். மயிலாடுதுறை மணக்குடியில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். புறவழிச்சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்குமார், பெருவழுதி,நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன், தமிழ்த் தேசிய முன்னணி சுகுமாரன், மாவட்ட வளர்ச்சி குழு நிர்வாகிகள் கணேசன், பூபதி, முன்னாள் தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News