மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் நற்கருணை பெருவிழா

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நற்கருணை பெருவிழா : உலக நன்மைக்காக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

Update: 2024-07-29 04:59 GMT
. மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நற்கருணை பெருவிழா நடைபெற்றது. விழாவின் முதல் நிகழ்வாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை ஜோ கிளமெண்ட் அடிகளார், திருச்சி புனித வளனார் மேலாண்மை கல்லூரி இயக்குநர் பால்ராஜ் அடிகளார், கூறைநாடு பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார், ஆத்துக்குடி பங்குத்தந்தை மரியதாஸ் அடிகளார், எருக்கூர் பங்குத்தந்தை இருதயசாமி அடிகளார், சீர்காழி பங்குத்தந்தை டோனி அடிகளார், பில்லாவடந்தை பங்குத்தந்தை சாலமோன் அடிகளார், குத்தாலம் பங்குத்தந்தை ஜெர்லின் கார்ட்டர் அடிகளார், உள்ளிட்ட அருட்தந்தையர்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் நற்கருணை பவனி மற்றும் ஆராதனை நடைபெற்றது. திருச்சி புனித வளனார் தன்னாட்சி கல்லூரி அதிபர் முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் அடிகளார் நற்கருணையின் மகத்துவம் குறித்து மறையுரையாற்றினார். பாளையங்கோட்டை உதவி பங்குத்தந்தை கித்தேரி முத்து அடிகளார் நற்கருணை பவனியை வழிநடத்தி இறைஆசீர் வழங்கினார். முன்னதாக நடைபெற்ற தொடர் நற்கருணை ஆராதனை வழிபாட்டு நிகழ்வில் அன்பிய குழுவினர் ஒண்றிணைந்து உலக அமைதிக்காகவும், மக்கள் நலன்களுக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் நிலைத்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், அன்பியக் குழுவினர், மரியாயின் சேனையினர், வின்சென்ட் தே பவுல் சபையினர், பலிபீட சிறுவர்கள், பாடகற்குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Similar News