ஆரணி அருகே செய்யாறு, கமண்டலநாகநதி ஆற்று படுகைகளில் மணல் திருடும் மாபியா கும்பல். கண்டு கொள்ளாத காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர்.
ஆரணி அடுத்த தச்சூர் செய்யாற்று மணல் திருடர்கள் சுரண்டி எடுத்ததால் ஆற்றுப்பாலத்தில் பில்லர் தெரியும் அளவிற்கு மணல் குறைந்து ஆற்று பாலம் உறுதித் தன்மை குறைந்துள்ளது என பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆரணி செய்யாற்றில் பகல் நேரத்தில் மணலை குவித்து வைத்துள்ளனர்.;
ஆரணி அடுத்த சேவூர், குண்ணத்தூர் ஆகிய கமண்டல நாகநதிக்கரையிலும், தச்சூர், மோட்டூர் ஆகிய இடங்களில் உள்ள செய்யாற்று படுகையிலும் தொடர்ந்து மணல் மாபியா கும்பலால் மணல் திருட்டு அமோகமாக நடைபெற்று வருவதை காவல் துறையினரும், வருவாய் துறையினரும், பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என்று தன்னார்வலர்கள் புகார் எழுப்பியுள்ளனர். ஆரணி அடுத்த தச்சூர், மோட்டூர், விண்ணமங்கலம் ஆகிய செய்யாற்று படுகையிலும், மேலும் சேவூர், குண்ணத்தூர், எஸ்.வி நகரம், மாமண்டூர், மொழுகம்பூண்டி, கல்பூண்டி, சீசமங்கலம், காரமேடு கமண்டல நாகநதி ஆற்றுப்படுகையிலும் மணல் மாபியா கும்பல் அமோகமாக மணலை கடத்திச்செல்கின்றனர். மேலும் பகல் நேரத்தில் மணலை ஜலித்து குவித்து வைத்துவிடுகின்றனர். இரவு நேரங்களில் டிராக்டர்களில் மணல் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இவ்வாறு மணல் எடுத்து கமண்டல நாகநதிக்கரை மற்றும் செய்யாற்றில் சுமார் 10அடி ஆழத்திற்கு மணல் எடுத்துள்ளனர். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மழைக்கு பிறகு ஆற்றின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி அங்கிருந்த மணற்பரப்பால் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்கப்பட்டது. சுற்றியுள்ள நிலங்களில் தென்னை உட்பட சாகுபடிகளுக்கு இந்த கமண்டல நாகநதி ஆதாரமாக உள்ளது. ஆற்றை ஆதாரமாகக்கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களால் கிராமங்களுக்கு குடிநீர் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது. தற்போது அதிகப்படியான மணல் திருட்டால் கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் அதிக அளவில் ஏற்படும் நிலை உள்ளது. கமண்டல நாக நதி மற்றும் செய்யாற்றில் மழைக்காலங்களில் வரும் நீரே ஆரணி பகுதிக்கு ஆதாரமாக உள்ளது இந்த நீர் ஆற்றில் தேங்கினால் குடிநீர் பிரச்சினை ஏற்படாது. ஆனால் சிலர் சுயலாபத்திற்காக மணலை திருடி விற்பனை செய்வதால் பல இடங்களில் கமண்டல நாக நதி வெறும் பாறையாக காட்சி அளிக்கிறது. பருவ மழை பெய்தும் ஆற்றில் மணல் சுரண்டப்பட்டு பாறைகளாக மாறியதால் தண்ணீர் தங்கவில்லை. அதிகாரிகள் கண்காணிப்பினை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் ஆற்றின் வளத்தை பாதுகாக்க அதிகாரிகள் உரிய கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ஆரணி கமண்டல நாகநதி மற்றும் செய்யாற்றுப்படுகையிலும் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது குறி்த்து பல முறை வருவாய் அதிகாரிகளிடமும், காவல் துறையினரிடமும் புகார் கொடுத்தும் இது வரை எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கனிம வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும். தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்றால் பின் வரும் காலங்களில் அதிக அளவில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு தண்ணீருக்காக கையேந்தும் நிலை வரும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆற்றில் பெண்கள் மணலை ஜலித்து மணல் குவியலாக குவித்து வைக்கின்றனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கூறினாலும் மெத்தனமாக உள்ளனர். மேலும் தச்சூர் ஆற்றுப்படுகையில் மணல் அதிக அளவில் எடுத்துவருவதால் ஆற்றுபபாலத்தின் பில்லர் தெரியும் அளவிற்கு சுரண்டி எடுத்து வருகின்றனர். இதனால் ஆற்றுப்பாலத்தின் உறுதித்தன்மை குறைந்து வருகிறது. இதனால் பேராபத்து வரும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். அதில் வரும் ஊற்று நீரை சட்டத்திற்கு புறம்பாக மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி தனியார் செங்கல் சூளைக்கு பயன்படுத்துகின்றனர். இது குறித்தும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.