தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தூய்மைப் பணியை ஆய்வு செய்த, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். பேராவூரணி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில், பேராவூரணி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமரகுரு, துப்புரவு ஆய்வாளர் வீரமணி மேற்பார்வையில் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அதனை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், தூய்மைப்பணிக்கு தேவையான பொருட்களையும் தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தவர்களிடம் நலம் விசாரித்த சட்டமன்ற உறுப்பினர், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது மருத்துவர் சிந்தியா, ரம்யா, பாலா, செவிலியர் சித்ரா, திமுக தலைமைப் பொதுக்குழு அ.அப்துல் மஜீத் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர்.