பேருந்து நிலையம் ஆய்வு

ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-02-11 17:10 GMT
ஈரோடு பேருந்து நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் பேருந்துகள் வந்து செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கரூர் சாலையில் உள்ள சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 24 ஏக்கரில் ரூ.63.50 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 80 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள பேருந்து தரைத்தளமானது 7 ஆயிரத்து 746 சதுர மீட்டர் பரப்பிலும், முதல் தளம் 4 ஆயிரத்து 260 சதுர மீட்டர் பரப்பிலும், நடைமேடை 5 ஆயிரத்து 378 சதுர மீட்டரிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைய உள்ள நிலையில், நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, வைரபாளையம் காவிரி ஆற்றங்கரையோரத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சிக்கு சொந்தமான நுண்ணுயிர் உரக்கிடங்கு மையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த், துணை ஆணையர் தனலட்சுமி, தலைமை பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், பொறியாளர்கள் பிச்சமுத்து, ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Similar News