ஆடுகள் பலி
தெரு நாய்கள் கடித்து 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன.;
அரசின் அலட்சியப் போக்கிற்கு பாரதிய ஜனதா கட்சியின் கடும் கண்டனம் கடந்த ஒரு மாத காலமாக திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் தெரு நாய்கள் கடித்து 200க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன. கடந்த வாரத்தில் நாய்கள் கடித்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆடுகளும் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மூலனூர் பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஆடுகளும் பலியாகி உள்ளன. இதை தடுக்க கோரியும் இறந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு கோரியும் விவசாயிகள் போராடிய பொழுது தாராபுரம் வட்டாட்சியர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என 6.02. 2025 அன்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.ஆனால் நாளது தேதி வரை எந்தவித நஷ்டஈடும் வழங்கவில்லை. நாய்களையும் பிடிக்கவில்லை. இன்றைய தினம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள ராமலிங்கபுரம் பகுதியில் நாய்கள் கடித்து 25க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளன விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்ட போது பேச்சு வார்த்தை நடத்த வந்த பெருந்துறை வட்டாட்சியர் கண்முன்னே தெருநாய்கள் கூட்டமாக வந்து ஆட்டை கடித்து குதறி உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூன்று முக்கிய விவசாய குடும்பத்தில் பிறந்த அமைச்சர் பெருமக்கள் திரு முத்துசாமி, திரு சாமிநாதன், மற்றும் திருமதி கயல்விழி ஆகியோர்கள் இருந்தும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க தவறிய அமைச்சர்களுக்கு கடும் கண்டனத்தை பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துக் கொள்கிறது. அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இதை பலமுறை கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக தமிழக அரசு தெரு நாய்களை பிடிப்பதற்கும் இறந்த ஆடுகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது. அரசு தவறும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் எனவும் விவசாயிகள் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி என்றும் துணை நிற்கும் எனவும் எங்களது மாநிலத் தலைவர் திரு K.அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற ஆடுகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களில் பட்டியடைக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவும் பாஜக தயங்காது என்பதை இதன் மூலம் எச்சரிக்க விரும்புகிறோம்.