கண்டமங்கலத்தில் கல்லால் அடித்து பெண் கொலை: கணவா் கைது
கல்லால் அடித்து பெண் கொலை: கணவா் கைது;
கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கி.மணிகண்டன் (47). இவரது மனைவி உமா (42). இருவரும் செங்கல் சூளையில் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனா். இவா்களுக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகின்றன. தம்பதிக்கு மனோ (21) என்ற மகனும், வினோதினி (19) என்ற மகளும் உள்ளனா்.மணிகண்டனுக்கும் உமாவுக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். பக்கத்து வீட்டினா் இருவரையும் சமாதனம் செய்துவைத்தனராம். பின்னா், இரவு 11மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த உமாவின் தலையில் குழவிக் கல்லால் மணிகண்டன் அடித்ததாகக் கூறப்படுகிறது.இதில், பலத்த காயமடைந்த உமா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடம் வந்த கண்டமங்கலம் போலீஸாா், உமாவின் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.