நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் வாரியாக உழவன் செயலியில்
நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் வாரியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.;
விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்திற்குள் அறுவடை செய்ய உதவிடும் வகையில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தனியாருக்குச் சொந்தமான 4456 நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் வாரியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்தில் அறுவடை செய்வதற்குப் போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் செய்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. நெல் அறுவடை காலங்களில் அந்தந்த பகுதிகளின் தேவைக்கேற்ப தனியார் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பதோடு விவசாயிகள் அறுவடை இயந்திரங்களைப் பெறுவதற்காக இடைத்தரர்களை அணுக வேண்டியும், மேலும் வாடகையோடு தரகுக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளதால் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. இதனை தவிர்த்திட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்படி உரிமையாளர்கள் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 2025 ம் ஆண்டுக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அறுவடை செய்ய பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூபாய் 2600/- எனவும் டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூபாய் 1800/- எனவும் வாடகை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. எனவே நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் பெற்று விவசாயிகளின் அறுவடை பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 4456 அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களின் விபரங்கள் அதாவது 3909 எண்கள் டயர் வகை அறுவடை இயந்திரங்கள் மற்றும் 547 எண்கள் செயின் வகை அறுவடை இயந்திரங்கள் விபரங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உழவன் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 24 எண்கள் டயர் வகை இயந்திரங்கள் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம் அல்லது அருகாமை மாவட்டத்திலுள்ள அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறுவடை இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.