பச்சை குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா
மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று முருகப்பெருமான் பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான 17 ஆம் தேதி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகமும், 18 ம்தேதி சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாணம் வைபோகமும் உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.திருவிழாவின் 8-ஆம் நாளான நேற்று (மார்ச்.14) சுப்பிரமணிய சுவாமி - தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது சிறிய சப்பரத்தில் மூஞ்சூறு வாகனத்தில் விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வீதி உலா வந்தனர். இதைத்தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பெரியரத வீதி, சன்னதி தெரு, கீழரத வீதி, மேலரதவீதிவழியாக சன்னதியை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீதி உலாவின் போது ஏராளமான பக்தர்கள் ரத வீதிகளில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.