இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர் என ஜாதி மதம் கடந்து தமிழ் பாரம்பரிய முறைப்படி
300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு;
தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது. கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 300 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் என சாதி, மதம் கடந்து கலந்து கொண்டவர்களுக்கு, தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.வேதாரன்யம் நகர மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி,வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, கீழையூர் வட்டார ஆத்மா குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், வேளாண்மை ஆத்மா குழு உறுப்பினர் மரிய.சார்லஸ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் மெர்லின் அன்னமலர் ஆகியோர் கலந்து கொண்டு, அட்சதை தூவி கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர். மேலும், புளி சோறு, தயிர் சோறு, தேங்காய், சோறு, எழுமிச்சை சோறு, இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலையில் பந்தி பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை வழங்கினர். உறவுகளால் வீட்டில் வளைகாப்பு செய்திருந்தாலும், ஒரே இடத்தில் இப்படி எல்லோருக்கும் வளைகாப்பு செய்து, சீர்வரிசை வழங்கி, விழா எடுப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பெத்த மகளை போல பாவித்து வளைகாப்பு செய்ததை எங்களால் மறக்க முடியாது என்றும், எங்கள் மதத்தில் இது போன்ற சடங்குகள் இல்லை. இப்போது இந்த சடங்குகள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், கர்ப்பிணி பெண்கள் உற்சாகம் பொங்க தெரிவித்தனர். முடிவில், கீழையூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா நன்றி கூறினார்.