
கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- மகளிருக்கு நிதி அதிகாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு தொடங்கியுள்ள மகளிர் மதிப்பு திட்டம் பெண்களுக்கு ஒரு சிறப்பான சேமிப்பு திட்டம் ஆகும். இத்திட்டத்தில் சேராத பெண்கள் உடனடியாக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டத்தில் பெண் குழந்தை அல்லது தனிப்பட்ட பெண்ணின் பெயரில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தனிப்பட்ட முறையிலும், 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் உரிய பாதுகாவலர் மூலமும் இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்கலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூபாய். 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டம் முதிர்வடையும். இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டிற்கான வட்டி விகிதம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 7.5% வழங்கப்படும் . கணக்கு தொடங்கிய நாளிலிருந்து ஓராண்டு நிறைவடையும்போது 40 சதவீதம் வரை மீதி தொகையில் திரும்ப பெற அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர்கள் / பாதுகாவலர்கள் மரணமடைந்தாலோ அல்லதூ தீவிர மருத்துவக் காரணங்கள் இருந்தாலும் இந்த கணக்கை முடித்துக் கொள்ளலாம். கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் கணக்கை முன்கூட்டியே முடித்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு முடித்துக்கொள்ளும் பட்சத்தில் வட்டவிகிதம் 2% குறைக்கப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை கன்னியாகுமரி கோட்டத்திற்கு உட்பட்ட அலுவலகங்களில் இதுவரை 13000 க்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் மார்ச்-31ஆம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைய உள்ளது. மேலும் மார்ச் 30 மற்றும 31 ஆகிய இரு தினங்கள் விடுமுறை என்பதால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் மார்ச்-29 தேதிக்குள் இந்த வாய்ப்பை அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அனைத்து அஞ்சலகங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.