கன்னியாகுமரி தொகுதி எம் எல் ஏ வும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளரை வலியுறுத்தி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில்வே இரு வழிப்பாதைக்காக நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலை ரூ. 7 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்பணிகள் தொடங்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் இப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்பணிகள் 2025-ம் ஆண்டை கடந்த பிறகும் நிறைவு பெறாமல் உள்ளது. மேலும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அதிக நேரம் பேருந்துகள் சாலைகளில் நின்று செல்கின்ற நிலை ஏற்படுவதால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள். குறிப்பாக விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டு உள்ளவர்களையும், நோய் தாக்குதலுக்கு உட்பட்ட நோயாளிகளையும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்ற அவசர ஆம்புலன்ஸ்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு நாகர்கோவில், ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகள் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை காலதாமதம் செய்யாமல் போர்கால அடிப்படையில் நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என கூறியுள்ளார்.